Tuesday, December 1, 2015

கிருமிபோஜனம்-12

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். 

இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்

Sunday, November 1, 2015

வஜ்ர கண்டகம்-11

 வஜ்ர கண்டகம்: கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு.

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். 

நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்

Friday, October 2, 2015

அக்னிகுண்டம்-10

அக்னிகுண்டம்: 

  • பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். 
  • இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

Thursday, July 30, 2015

அந்தகூபம்-9

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

அந்தகூபம்: 
  • உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது.
  •  கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும்.
  •  விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

Monday, June 1, 2015

பன்றி முகம் - 8

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!



பன்றி முகம்: 

குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும்.

 இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

Monday, May 11, 2015

அசிபத்திரம்-7

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. 

இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

Saturday, April 4, 2015

கால சூத்திரம்.-6

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். 

இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

Sunday, March 1, 2015

கும்பீபாகம் - 5

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது.

 எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

Sunday, February 1, 2015

மகா ரௌரவ நரகம் - 4

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். 

இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

Sunday, January 18, 2015

ரௌரவ நரகம்-3

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

பாவ செயல்கள்:
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும்.

தண்டனை விபரம்
 இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

Sunday, January 11, 2015

மனம் போனபடி போகாதே!

பகவான், மனிதனையும் படைத்து, அவனுக்கு பல விதமான உறுப்புகளையும் கொடுத்ததோடு, எண்ணங்களுக்கு காரணமான மனதையும் கொடுத்தான்; இந்த மனதில் தான், பல எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை செயல்படுத்த, உடல் உறுப்புகள் பயன்படுகின்றன. இந்த உடல் உறுப்புகளைக் கொண்டு, நல்ல காரியங்கள் செய்து, புண்ணியம் பெறலாம்; தவறுகளை செய்து, பாவத்தையும் சம்பாதிக்கலாம். புண்ணியம் செய்தவர்கள் நல்ல கதியடைவர்; அதாவது, புண்ணிய லோக வாசம் கிடைக்கும். 
புண்ணிய லோகம் என்பது, மேலே, மேலே என்று இரண்டு, மூன்று இடங்களை கடந்து சென்றடையும் லோகம். பரமபதம், வைகுண்டம் என்றெல்லாம் சொல்கின்றனரே... அந்த இடம். புண்ணியம் செய்தவர்கள், இந்த இடத்தை அடைவது ரொம்ப சுலபம். அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து, சகல மரியாதையுடன் தேவர்கள் அழைத்து போவர். அங்கே இவர்கள், சகல சுகபோகங்களுடன் இருப்பர்.
பாவம் செய்தவர்கள் பாவிகள். பாவம் செய்வதற்கும், பகவான் கொடுத்த உறுப்புகள் தான் உபயோகமாகின்றன. இப்படிப்பட்டவர்களை, எமதூதர்கள் வந்து, கட்டி இழுத்துப் போவர். போகும் வழி ரொம்பவும் கொடூரமானது. வழியில் சுடு மணல், நெருப்பு, ஆறு, கல், முள் நிறைந்த பிரதேசம் வழியாக இழுத்துக் கொண்டு போய், எமதர்மன் முன் நிறுத்தி, இவன் செய்த பாவங்களை பட்டியலிட்டு படிப்பர்; பாவத்துக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். 
சாதாரண நரகம், கும்பீ பாகம், ரவுரவம் என்றெல்லாம் பிரித்து வைத்திருக்கின்றனர். பாவத்தின் தன்மைக்கு ஏற்ப, அந்தந்த வகுப்புகள் தண்டனையாக கிடைக்கும். அங்கே போய் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதையெல்லாம் படிக்கும் போது, பயமாகத் தான் இருக்கும். ஆனால், மனம் சும்மா இருப்பதில்லையே... எதையாவது செய்யச் சொல்கிறது. பாவம், புண்ணியம் இரண்டுக்குமே மனம் தான் காரணம்; அதனால் தான், "மனம் போனபடி போகாதே...' என்றனர். அது நல்ல வழியா, தவறான வழியா என்பதை, எப்படி தெரிந்து கொள்வது? மகான்களிடம் விசாரணை செய்; அவர்கள் நல்வழி காட்டுவர்.
மனிதன் எப்படியாவது நற்கதி பெற முயல வேண்டும். பிறந்து விட்டால் மட்டும் போதாது; பிறவிப் பயனை அடைய வேண்டும்!

Sunday, January 4, 2015

செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?

புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்... சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், "அஜாமிளன் சரித்திரம்' என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் அறிந்தவர் அஜாமிளன். தினமும் காட்டுக்கு சென்று சமித்து, தர்ப்பை எல்லாம் எடுத்து வந்து, பூஜை, வழிபாடு எல்லாம் முறையாக செய்து வருபவர். இப்படி அடிக்கடி காட்டுக்குப் போகும்போது, ஒரு சமயம் அங்கிருந்த வேடப் பெண்ணைக் கண்டார். ஏதோ ஒரு மனமாற்றம்; அவளிடம் ஈடுபாடு கொண்டார். 
நாளடைவில் இந்த சிநேகம் வலுப்பெற்றது. இவரது ஆசார அனுஷ்டானம் குறைந்தது. கடைசியில் வீடு, மனைவி யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வேடப் பெண்ணுடனேயே தங்கி விட்டார். அது மட்டுமா? அவள் மூலமாக நாலைந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். கடைசி பிள்ளைக்கு, "நாராயணன்' என்று பெயரிட்டார். காலம் ஓடியது. இவரது மரண காலம் வந்தது; படுத்து விட்டார். இவரை அழைத்துப் போக வந்து விட்டனர் எம தூதர்கள். அவர்களைக் கண்டதும், அஜாமிளன் நடுங்கிப் போய், பயத்தில் தன் பிள்ளையாகிய நாராயணனை, "நாராயணா!' என்று கூப்பிட்டு விட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில் இருந்து இவரை அழைத்துப் போக அங்கே வந்து விட்டனர் விஷ்ணு தூதர்கள். 
இவர்களைப் பார்த்த எம தூதர்கள், "அடடா... நீங்கள் இங்கே வரலாமா? இவன் மகா பாவி. இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம்; நீங்கள் போய் விடுங்கள்...' என்றனர்.  அதற்கு, "இவனா பாவி? இவன் மகா புண்ணியசாலி. அதனால் தான் இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம். இவன் கடைசி காலத்தில், "நாராயணா!' என்று சொன்னதால், இவனுக்கு விஷ்ணுலோக பதவி கிடைக்கிறது...' என்றனர் விஷ்ணு தூதர்கள். இப்படி எம தூதர்களும், விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் செய்து பார்த்துவிட்டு, சரி... இதை நம் தலைவரிடமே கேட்டு விடலாம் என்று போய் விட்டனர். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அஜாமிளன். 
அப்போதுதான் அவருக்கு ஞானம் உண்டாயிற்று... "அடடா... நாம் இவ்வளவு காலம் எவ்வளவு பாவம் செய்துள்ளோம். இந்த நாராயண நாமமல்லவா நம்மைக் காப்பாற்றியது. அதன் பெருமையை இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டோமே...' என்று, வருத்தப்பட்டார்.  வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனைக் குறித்து தவம் செய்து, முக்தி பெற்றார் என்பது சரித்திரம்.
பகவான் நாமாவை மறக்காமல் சொல்லுங்களேன்... செலவு எதுவுமில்லாமல், புண்ணியம் கிடைக்குமே!