Friday, August 23, 2013

ஒரு தரம் ஒரே தரம்!

"முருகா...' இப்படி ஒரு தடவை சொன்னால் போதும். செய்த பாவமெல்லாம் விலகியோடி விடும். முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று, அந்தப் பெருமானின் திருநாம மகிமையை அறிந்து கொள்வோம். கங்கை கரையில் முனிவர் ஒருவர், கரையோரத்தில் கிடைத்த இலைகளைக் கொண்டு குடில் அமைத்து, வசித்து வந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன். ஒருநாள், தன் தந்தையிடம், "தெய்வங்களிலேயே உயர்ந்தவர் யார்?' என்று கேட்டான்.
"அதிலென்னப்பா சந்தேகம். முருகப்பெருமானே உயர்ந்தவர். முருகனை வணங்குவோர், எல்லா தெய்வங்களையும் வணங்கிய புண்ணியம் பெறுவர். தாயின் சம்பந்த மில்லாமல் பிறந்த அபூர்வப்பிறவி. "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிர மணியருக்கு மிஞ்சிய தெய்வ மில்லை!' என்று, நம் தேசத்தில் பலகாலமாக சொலவடை உள்ளதை, நீ அறிவாய் அல்லவா! அவரது வரலாற்றைத் தெரிவிக்கும் கந்தபுராணத்தை படிக்க படிக்க இனிக்கும். முருகனை ஆராதிப்பவர்களுக்கு பிறப்பற்ற நிலை உறுதி...' என்று புகழ்ந்து கூறினார்.

தந்தையின் வார்த்தைகள், அந்த பிஞ்சு மனதில் பதிந்தன. அன்று முதல், முருகப்பெருமானின் திருநாமம் சொல்லியே தியானிக்க ஆரம்பித்தான். ஒருமுறை, முனிவர், பக்கத்து ஊரில் நடந்த யாகத்துக்கு கிளம்பி விட்டார். வீட்டில் தனியாக இருந்தான் மகன். அப்போது ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவன், குடிலை நோக்கி தேரில் வந்தான். சிறுவனிடம், "தம்பி... இங்கிருக்கும் முனிவர் எங்கே?' என்றான்."அன்பரே... நீர் யார்?' "நான் இந்நாட்டின் மன்னன்...' "அப்படியா, நீர் தேடி வந்தவர் என் தந்தை, ஒரு யாகத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். அவரிடம் என்ன கேட்க நினைத்தீரோ, அதை என்னிடம் கேட்கலாம்...' "தம்பி... நீ சிறுவன். என் பிரச்னையை உன்னிடம் சொல்லி என்னாகப் போகிறது?'

"அப்படி நினைக்காதீரும். இருள் சூழ்ந்த வீட்டிற்குள், ஒரு சிறுவன் விளக்கை எடுத்து வந்தால், அந்த விளக்கு வெளிச்சம் தராதா என்ன? சிறுவன் என்பதால் மறுத்து விடுமா? நான், உம் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன், தைரியமாகச் சொல்லும்...' "தம்பி... நான் மிருகங்களை வேட்டையாடும் போது, தவறுதலாக ஒரு பாணம் முனிவர் மீது பாய்ந்து இறந்து போனார். சாதுவைக் கொன்ற பாவத்தால், பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளது. இதிலிருந்து விடுபட வழி வேண்டும்...' "இதற்கா இவ்வளவு கலக்கம். கங்கையில் இறங்கி, வடக்கு நோக்கி நின்று, "ஓம் முருகா' என்று, மூன்று முறை சொல்லும். கொலைப் பாவத்தையும் நீக்கும் சக்தி அந்த மந்திரத்துக்கு உண்டு...'

சிறுவனின் அறிவுரையை ஏற்ற மன்னன், அதன்படியே செய்ய, பிரம்மஹத்தி விலகி மகிழ்வுடன் சென்றான்.வீடு திரும்பிய முனிவர், அங்கே தேர்சக்கர தடம் இருப்பதைக் கண்டு, அங்கு யார் வந்தது என்பது பற்றி மகனிடம் விசாரித்தார். மகனும் நடந்ததைச் சொல்ல, முனிவருக்கு கோபம் வந்து விட்டது. "அட மூடனே... முருக மந்திரத்தின் பெருமை தெரியாதவனே. ஒரு தரம்... ஒரே ஒரு தரம், "முருகா' என்று சொன்னாலே, ஆயிரம் பிரம்மஹத்திகள் ஓடி விடுமே. நீ மூன்று முறை சொல்லும்படி கூறி, அதன் மகிமையைக் கெடுத்து விட்டாயே. மறுபிறவியில், நீ வேடனாகப் பிறப்பாய். முருகனின் திருநாமமான, "குகன்' என்ற பெயர் தாங்கி, இதே கங்கைக்கரையில் படகோட்டியாய் இருப்பாய். விஷ்ணு, ராமாவதாரம் எடுத்து வந்து, உனக்கு அருள்பாலித்த பிறகே, நீ முக்தி பெறுவாய்...' என்றார். அந்தச் சிறுவனே, குகன் என்ற பெயரில் பிறந்து, காட்டுக்கு ராமன் வந்த போது, கங்கையைக் கடக்க உதவினான்.

முருகன் திருநாமத்தின் மகிமையை பார்த்தீர்களா! தினமும் ஒருமுறை, "முருகா' என்று சொல்லுங்கள். அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள். முருகன் நமக்களிக்கும் பிறந்தநாள் பரிசு இது தான்! 
***

Friday, August 16, 2013

தாமிஸிர நரகம்!-1




 பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்


Friday, August 9, 2013

பிறருக்கு கேடு நினைத்தால்...

ஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.

ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது. 

ஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, "மகாராஜா... எனக்கு ஒரு குறை இருக்கிறது!' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், "என்ன அது?' என்று கேட்டார். "பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை!' என்றான். "அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார் ராஜா. "நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே!' என்றான்.

ராஜாவும், "ஓ... அப்படியா? சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்!' என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.  வித்வான் யோசித்தார். "சரி... இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்!' என்று யூகித்துக் கொண்டார். "அப்படியே ஆகட்டும் மகாராஜா... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள். 

"பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது!' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான்.
இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, "அப்பாடா... தொலைந்தான்!' என்று சந்தோஷப்பட்டான். 

இந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார்.  எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.
எண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, "ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது!' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்! குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார். 

மாலை போட்டு மரியாதை செய்து, "பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்?' என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வித்வானும், "அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்... அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்!' என்றார்.

ராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, "நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு! உனக்காக சிதை தயாராக இருக்கும்!' என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்  ராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டான். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினான்.

"பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்!' என்று இப்போது புரிகிறதா? எனவே, பிறருக்கு கேடு நினையாதீர். 

Saturday, August 3, 2013

முக்கியமான இருபத்தெட்டு நரகங்கள் !

 நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.


1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.



விரிவாக வரும் பதிவுகளில் பார்போம்!